சேலம்: பெங்களூரில் இருந்து ஹவாலா பணம் வருவதாக நினைத்து சேலத்தில் லாரியுடன் டிரைவரை கடத்திய கேரளா கும்பலை போலீசார் கைது செய்தனர். கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கடந்த மாதம் 15ம் தேதி மாங்காய் லோடு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று பெங்களூருக்கு சென்றது. லாரியை பாலக்காட்டை சேர்ந்த சமீர் என்பவர் ஓட்டிச் சென்றார். அங்கு மாங்காய் லோடை இறக்கி வைத்து விட்டு மறுநாள் கேரளா நோக்கி லாரி வந்து கொண்டிருந்தது. சேலம் கந்தம்பட்டி பைபாஸ் வழியாக வந்த போது, பின்தொடர்ந்து சொகுசு காரில் வந்த கும்பல் லாரியை வழிமறித்து டிரைவரை காரிலும், லாரியை வேறு டிரைவர் மூலமாகவும் கடத்திச்சென்றது. பின்னர் இந்த கும்பல் காரில் கடத்திச் சென்ற டிரைவர் சமீரிடம் இருந்து ரூ.2 ஆயிரம், செல்போனை பறித்துக் கொண்டு நாமக்கலில் இறக்கி விட்டு தப்பியது. டிரைவர் அங்கிருந்து வந்து, சூரமங்கலம் போலீசில் புகார் அளித்தார்.