கோவை: கோவை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.5.59 கோடியில் முடிவுற்ற 9 பணிகள், ரூ.49.62 கோடியில் 263 புதிய திட்டப்பணிகளின் துவக்க விழா நேற்று நடந்தது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தனர். பின்னர், அமைச்சர்கள், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகுபடுத்தப்பட்ட வாலாங்குளம் உள்பட பல்வேறு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.