வாலாஜாபாத்: வாலாஜாபாத் ஒன்றியம் தேவரியம்பாக்கம் ஊராட்சியை சுற்றி தொண்டங்குளம், உள்ளாவூர், வரதாபுரம், அளவூர், தாழயம்பட்டு, வளாகம் உள்பட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. 1500க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் இந்த கிராமத்தை சுற்றியுள்ளன. இங்குள்ள விளை நிலங்களில் முப்போகமும் நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்து, நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்வது வழக்கம். தற்போது, அரசு சார்பில் அமைக்கப்படும் நெல் கொள்முதல் நிலையங்களில், அறுவடை செய்த நெற்பயிர்களை கொண்டு செல்வது பெரும் சவாலாக உள்ளது. இதனால், சுற்றுவட்டார கிராமங்களின் மையப் பகுதியாக அமைந்துள்ள தேவரியம்பாக்கம் கிராமத்தில், நெல் கொள்முதல் அமையவேண்டும் என இப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.