10ம் வகுப்பு மாணவி 2 ஆண்டுகளாக சீரழிப்பு: தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது

சேலம்: சேலத்தில் 10ம் வகுப்பு மாணவியை 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த தாயின் கள்ளக்காதலனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். சேலம் தாதகாப்பட்டி வேலுபுதுத்தெரு பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி, கோவையில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கியிருந்து 10ம் வகுப்பு படித்து வருகிறார். மேலும், அங்குள்ள ஒரு மில்லில் பகுதி நேரமாக வேலை பார்த்தும் வந்துள்ளார். இச்சிறுமியை நேற்று, அவரின் அத்தை சேலத்திற்கு அழைத்து வந்திருந்தார்.

அப்போது, இனி உனது வீட்டில் தாயுடன் தங்கியிருந்து படிக்கும்படி கூறியுள்ளார். அதற்கு அச்சிறுமி, நான் அம்மாவுடன் இருக்க மாட்டேன். அந்த வீட்டிற்கு என்னை அனுப்பாதீர்கள் எனக்கூறியுள்ளார். தொடர்ந்து, தனது தந்தை 8 ஆண்டுக்கு முன் இறந்தபின், அதேப்பகுதியை சேர்ந்த வெள்ளித்தொழிலாளி மணிமாறன் என்பவருடன் தாய் தொடர்பு வைத்துக்கொண்டார். அவர், வீட்டிற்கு அடிக்கடி வந்துச் செல்கிறார். 2 ஆண்டுக்கு முன் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து பலாத்காரம் செய்துவிட்டார்.

பிறகு அவ்வப்போது என்னை மிரட்டி பலாத்காரம் செய்திருக்கிறார். எனது தாயும் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டார். அதனால், அங்கு செல்ல மாட்டேன் எனக்கூறி கதறி அழுதுள்ளார். உடனே சிறுமியுடன், அவரின் அத்தை சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் கொடுத்தார். புகாரில் சிறுமிக்கு நேர்ந்த கொடூர சம்பவங்கள் பற்றி கூறினார். இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் சிறுமியிடம் விசாரித்தார். அதில், தாயின் கள்ளக்காதலன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து 2 ஆண்டுகளாக சீரழித்தது தெரியவந்தது.

கடந்த 2 மாதத்திற்கு முன்பு வரை சேலத்தில் தாயுடன் இருந்த சிறுமி, இங்கிருந்து தப்பித்தால் போதும் என கோவையில் உள்ள தனது அத்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு இருந்தபடி படிக்க வசதியாக அருகில் உள்ள தனியார் மில்லில் பகுதி நேர வேலைக்கு சென்று வந்திருக்கிறார். தனக்கு நேர்ந்த கொடுமையை யாரிடம் கூறுவது என தவித்து வந்த நிலையில், மீண்டும் தாயாருடன் இருக்கும்படி கூறியதும், முடியாது என அத்தையிடம் நடந்த அனைத்து சம்பவங்களையும் கூறியிருக்கிறார் என விசாரணையில் தெரிந்தது.

இதையடுத்து, இன்று காலை தாயின் கள்ளக்காதலனான மணிமாறனை (31) பிடித்து வந்து விசாரித்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட சிறுமியை சேலம் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இச்சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: