தினேஷ் கார்த்திக் ஆட்டம் அருமை: சச்சின் புகழாரம்

மும்பை:ஐபிஎல் 15ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் டூ பிளஸி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 5 போட்டிகளில் 3 வெற்றிகளும், இரண்டு தோல்விகள் உட்பட 6 புள்ளிகளுடன் 6வது இடத்தில் இருக்கிறது. இனி வரும் போட்டிகளில் ஆர்சிபி தொடர் வெற்றிகளை குவிக்கும் பட்சத்தில் முதல் நான்கு இடங்களில் நீடித்து, பிளே ஆஃப் செல்ல வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அதேபோல் 14 வருட கோப்பை கனவு இந்த வருடமாவது நிறைவேறுமா என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். பெங்களூர் அணியில் தினேஷ் கார்த்திக், தொடர்ந்து அபாரமாக விளையாடி பெஸ்ட் பினிஷராக செயல்பட்டு வருவதால், ஈ சாலா கப் நமதே கோஷம் இம்முறை சற்று உறுதியுடன் ஒலித்து வருகிறது.

ஆம், தினேஷ் கார்த்திக் இதுவரை ஐந்து போட்டிகளிலும் 32* (14), 14* (7), 44* (23), 7* (2), 34 (14) என ரன்களை குவித்து, பந்துவீச்சாளர்களை மிரட்டி வருகிறார். இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா, டோனியைவிட இவர்தான் பெஸ்ட் பினிஷசராக செயல்பட்டு வருகிறார். இதனால், தினேஷ்கார்த்திக்கிற்கு டி20 அணியில் மீண்டும் வாய்ப்பு கிடைப்பது உறுதி என பலரும் பேசி வருகின்றனர். இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கின் ஆட்டம் குறித்து சச்சின் புகழ்ந்து பேசியுள்ளார். அதில், “ஆர்சிபியில் மிகவும் அபாயகரமான லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனாக தினேஷ்கார்த்திக் இருக்கிறார்.

வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து எதுவாக இருந்தாலும், மைதானத்தின் 360 டிகிரியிலும் சுழன்று அடிக்கும் திறமை அவரிடம் இருக்கிறது. அதிலும் முதல் பந்தில் இருந்தே அவர் தனது அதிரடியை தொடங்குவதுதான் ஹைலைட். இதற்குமுன் மிட் விக்கெட் அல்லது கவர் திசையில் மட்டுமே அடிப்பேன் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர் இப்போது அப்படியல்ல. எல்லா திசையிலும் பந்துகளை பறக்கவிடுகிறார். பந்தை அவர் கடைசிவரை பார்த்து விளையாடுவதால்தான், இப்படி அதிரடி காட்ட முடிகிறது. லைன், லெந்த் இரண்டையும் சரியாக கணித்து விளையாடுகிறார். உலகில், ஒருசில வீரர்களால் மட்டுமே இப்படி விளையாட முடியும்” எனத் தெரிவித்தார்.

Related Stories: