மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான லீக் போட்டியில் இந்திய அணி, 110 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!

ஹாமில்டன்: மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு எதிரான உலக கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி, 110 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டிகளில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்திய அணி 5 போட்டிகளில் 2 வெற்றி மற்றும் 3 தோல்விகளுடன் 4வது இடத்தில் இருந்தது. மீதமுள்ள 2 போட்டிகளிலும் இந்திய அணி கட்டாயம் வென்றாக வேண்டிய சூழலில் இன்று வங்கதேச அணியுடன் மோதியது. ஹாமில்டன் நகரில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய மகளிர் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி ஓரளவு நல்ல துவக்கம் தந்த நிலையில், மந்தனா 30 ரன்களும், ஷபாலி 42 ரன்களும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய மிதாலி ராஜ் டக் அவுட் ஆனார். பின்னர் வந்த யஸ்திகா பாட்டியா மட்டும் ஒருமுனையில் போராடி அரைசதம் அடித்தார்.

ஹர்மன்பிரீத் கவுர் 14 ரன்களில் அவுட் ஆனார். கடைசி நேரத்தில் ரிச்சா கோஷ் 26 ரன்களும், ரானா 27 ரன்களும் எடுத்து சற்று கைகொடுக்க இந்திய மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்தது. பூஜா 30 ரன்களும், கோஸ்வாமி 2 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேசம் தரப்பில் ரிது மோனி 3 விக்கெட்களும், நஹிடா அக்தர் 2 விக்கெட்களும், ஆலம் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 230 ரன்கள் எடுத்தல் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களமிறங்கியது. இந்திய வீராங்கனைகளின் அசத்தலான பந்துவீச்சில் வங்கதேச அணி அடுத்தடுத்து விக்கெட்களை பறிகொடுத்தது. இறுதியில் 40.3 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 119 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரானா 4 விக்கெட் வீழ்த்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய அணி தனது கடைசி லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியுடன் வரும் மார்ச் 27-ம் தேதி மோதுகிறது.

Related Stories: