காஞ்சிபுரம்: உலகப்பிரசித்தி பெற்ற அருள்மிகு ஏகாம்பரநாதர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் ஆண்டுதோறும் விமரிசையாக நடக்கும். இந்தாண்டு கடந்த 8ம்தேதி விழா தொடங்கியது. விழாவை முன்னிட்டு ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. இதைத்தொடர்ந்த அலங்கரிக்கப்பட்ட சூரியபிரபை, சிம்மவாகனம், சந்திரபிரபை, பூதவாகனம், நாக வாகனம், வெள்ளி அதிகார நந்தி சேவை, வெள்ளி இடப வாகனம் போன்ற வாகனங்களில் ஏகாம்பரநாதர் வீதியுலா வந்து அருள்பாலித்தார். இதுபோல் கடந்த 13ம்தேதி 63 நாயன்மார்கள் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தனர். அன்றிரவு ஏகாம்பரநாதர் மற்றும் ஏலவார்குழலி அம்மன் அலங்கரிக்கப்பட்ட வெள்ளித்தேரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.