சென்டர் மீடியனில் பைக் மோதி காதலன் பலி, காதலி சீரியஸ் :ரகசிய திருமணம் முடித்து திரும்பிய போது சோகம்

பெரம்பலூர்: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் டிவிகே நகர் வடக்கு தெருவை சேர்ந்த மாணிக்கம் மகன் நவீன்குமார்(23). பிஎஸ்சி பயோ கெமிஸ்ட்ரி படித்து விட்டு போலீசில் சேருவதற்காக தனியார் கோச்சிங் சென்டரில் படித்து வந்தார். கபடி வீரரான நவீன்குமார் நேற்று அதிகாலை தனது தாய் ரேவதியிடம் பெரம்பலூர் மாவட்டத்தில் நடக்கும் கபடி போட்டியில் பங்கேற்க செல்வதாக கூறி விட்டு பைக்கில் புறப்பட்டு சென்றார். இதைத்தொடர்ந்து தன் காதலியான கள்ளக்குறிச்சி மாவட்டம் பெரிய செருவத்தூர் வடக்குத்தெருவை சேர்ந்த தேவன் மகள் சந்தியாவுடன்(19) பெரம்பலூரில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கள்ளக்குறிச்சி நோக்கி பைக்கில் நவீன்குமார் சென்றார்.

பின்னர் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் வாலிகண்டபுரம் அடுத்த தேவையூர் ஊராட்சி தம்பை கிராமம் அருகே வந்தனர். அப்போது தேசிய நெடுஞ்சாலை சென்டர் மீடியனில் பைக் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தலை, நெற்றியில் படுகாயமடைந்து நவீன்குமார் சம்பவ இடத்திலேயே பலியானார். தூக்கி வீசப்பட்டு சுயநினைவு இழந்த நிலையில் சந்தியா கிடந்தார்.ரோந்து வாகன போலீசார் நவீன்குமார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சந்தியாவை சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து மங்களமேடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில், சந்தியாவின் சகோதரர் ஒருவர் வந்து கள்ளக்குறிச்சியில் சிகிச்சை அளித்து கொள்வதாக கூறி அவரை ஆம்புலன்சில் அழைத்து சென்றார்.

Related Stories: