ஐஎஸ்எல் கால்பந்து செமிபைனல் ஜாம்ஷெட்பூர்-கேரளா மோதல்

பதோர்தா: ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முதல் அரையிறுதியின் முதல் சுற்றில் இன்று ஜாம்ஷெட்பூர் எப்சி-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி அணிகள் மோதுகின்றன. ஐஎஸ்எல் கால்பந்து  போட்டியின் 8வது தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கோவாவில் நடக்கும் இந்த தொடரில் அரையிறுதி சுற்றுகளில் விளையாட ஜாம்ஷெட்பூர் எப்சி-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்சி, ஐதராபாத் எப்சி-ஏடிகே மோகன் பகான் அணிகள் களம் காண உள்ளன. முதல் அரையிறுதியின் முதல் சுற்றில்  இன்று  ஜாம்ஷெட்பூர்-கேரளா அணிகள் களம் காண உள்ளன. ஐஎஸ்எல் தொடரில் 2017ம் ஆண்டு அறிமுகமான ஜாம்ஷெட்பூர் முதல்முறையாக  அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. லீக் சுற்றில் 20 ஆட்டங்களில் விளையாடி 13வெற்றி, 4டிரா, 3 தோல்விகளுடன்  43புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

அதனால் இறுதி ஆட்டத்துக்கு முன்னேறும் உறுதியுடன் ஜாம்ஷெட்பூர் இன்று களம் இறங்குகிறது. கேரளா அணி 3 வது முறையாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.  இந்த அணி 20 ஆட்டங்களில் விளையாடி 9வெற்றி, 7டிரா, 4 தோல்விகளுடன் 4வது இடத்தை பிடித்தது. ஐஎஸ்எல் தொடர்களில் 2014, 2016ம் ஆண்டுகளில் அரையிறுதிக்கு  முன்னேறியது. அந்த 2முறையும் கேரளா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. அந்த நம்பிக்கையுடன் கேரளா இன்று ஜாம்ஷெட்பூரை எதிர்கொள்ள உள்ளது. இன்றைய ஆட்டத்தில் மட்டுமின்றி மார்ச் 15ம்தேதி நடக்க உள்ள முதல் அரையிறுதியின் 2வது சுற்றிலும் இந்த 2 அணிகளும் மீண்டும் மோத உள்ளன. எனவே இந்த 2 ஆட்டங்களில் வெற்றிப்பெறுவதுடன்  அதிக கோல் வித்தியாசத்தில் வெல்வது இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை பெற்றுத் தரும். நடப்புத் தொடரில் விளையாடிய 2ஆட்டங்களில், ஜாம்ஷெட்பூர் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

* நேருக்கு நேர்...

இந்த 2 அணிகளும் 2017முதல் இதுவரை 10 ஆட்டங்களில்  நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் ஜாம்ஷெட்பூர் 3 ஆட்டங்களிலும், கேரளா ஒரு ஆட்டத்திலும் வெற்றிப் பெற்றுள்ளன. எஞ்சிய 6 ஆட்டங்கள் சமனில் முடிந்துள்ளன.

Related Stories: