எல்லைப் படை முகாமில் 4 வீரர்கள் சுட்டுக்கொலை: சக வீரர் செய்த பயங்கரம்

அமிர்தசரஸ்: பஞ்சாபில் உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் சக வீரர்கள் மீது நடந்த துப்பாக்கிசூட்டில் 5 பேர் பலியாயினர். ஒருவர் படுகாயமடைந்தார். பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் மாவட்டம், அட்டாரி- வாகா எல்லையில் இருந்து 12 கிமீ தொலைவில் காஸா என்ற இடத்தில் எல்லை பாதுகாப்பு படை (பிஎஸ்எப்) முகாம் உள்ளது. நேற்று காலை இந்த முகாமில் சட்டேப்பா என்ற வீரர், சக வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார். இதில், 4 வீரர்கள் பலியாயினர். ஒருவர் படுகாயமடைந்தார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவத்தில் துப்பாக்கிசூடு நடத்திய சட்டேப்பாவும் உயிரிழந்தார். அவர் தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு கொண்டாரா அல்லது வீரர்கள் சுட்டதில் அவர் இறந்தாரா என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து கேள்விப்பட்டதும் பிஎஸ்எப், பஞ்சாப் போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து பிஎஸ்எப் படையின் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘படுகாயமடைந்த வீரரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது,’’ என்றார். வீரரின் திடீர் துப்பாக்கிசூட்டுக்கான காரணம் குறித்து அதிகாரிகள் எதுவும் தெரிவிக்கவில்லை.

Related Stories: