ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அடுத்த வேப்பங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தனியார் தோல்தொழிற்சாலை இயங்கிவருகிறது. இங்கு ஒடுகத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். இந்த தொழிற்சாலையில் காலணிகள், பர்ஸ், பெல்ட் போன்ற தோல் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து தோல்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. இவ்வாறு, உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தோல் கழிவுகள், பிளாஸ்டிக் பொருள்கள் போன்றவை திறந்தவெளியில் இரவுதோறும் எரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.