மாநில வங்கியாளர் குழுவின் சிறப்பு கூட்டம் ஏ.டி.எம்., படிவங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும்: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்

சென்னை: மாநில வங்கியாளர் குழுவின் சிறப்பு கூட்டம் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அனைத்து வங்கிகளின் ஏடிஎம், படிவங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும். வங்கியின் உதவி மையங்கள் மற்றும் பொதுமக்களுடன் தொடர்பில் இருக்கும் அலுவலர்கள் தமிழ் நன்கு அறிந்திருக்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. பல்வேறு அரசுத் திட்டங்களில் வங்கிகளின் செயல்பாடு குறித்து அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். முன்னுரிமைத் துறைகளுக்கு கடன் வழங்கும் திட்டங்களை முனைப்பாகச் செயல்படுத்த வேண்டும்.

குறிப்பாக, ஏழை எளிய மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கி உதவிட வேண்டும் என வங்கிகளை வலியுறுத்தினார். தமிழகத்தில் முதல் முறையாக, வரும் 2022-23ம் நிதியாண்டின் தமிழக நிதிநிலை அறிக்கைக்காக வங்கியாளர்களுடன் கலந்தாலோசித்து, பரிந்துரைகள் பெறப்பட்டன. இந்த நிகழ்ச்சியில், நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் முருகானந்தம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் மற்றும் மாநில அளவிலான வங்கியாளர் குழு தலைவர் பார்த்தா ப்ரதிம் சென்குப்தா, இந்திய ரிசர்வ் வங்கி (சென்னை) மண்டல இயக்குநர் எஸ்.எம்.என்.சுவாமி நிதித்துறை (செலவினம்) அரசுச் செயலாளர் அருண்ராய் மற்றும் நிதித்துறை மற்றும் வங்கிகளைச் சார்ந்த உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Related Stories: