புதுடெல்லி: பராமரிப்புக்கு அனுமதிக்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தொடர்ந்துள்ள வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட கோரிய மேல்முறையீடு மனு மற்றும் ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனு ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், வேதாந்தா நிறுவனம் தரப்பில் கடந்த நவம்பரில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால மனுவில், ‘ஆலையில் உள்ள உயர் ரக இயந்திர உபகரணங்கள் துருப்பிடித்து சேதமாகும் நிலை உருவாகியுள்ளது. ஆகவே, ஸ்டெர்லைட் ஆலையை மூடிய உத்தரவை எதிர்த்த மனுவை ரத்து செய்து, ஆலை பராமரிப்பு பணி மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டது.