வருமுன் காப்போம் திட்டம் மூலம் கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்த நடவடிக்கை: அமைச்சர் ஆவடி நாசர் பேச்சு

திருத்தணி: வருமுன் காப்போம் திட்டம் மூலம் கொரோனா 3வது அலையை விரட்டியடிப்போம் என அமைச்சர் ஆவடி நாசர் பேசினார். கொரோனா தொற்றின் 3வது அலை துவங்கியுள்ளதால் நேற்று திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எஸ்.சந்திரன் எம்எல்ஏ, மாவட்ட பொறுப்பாளர் எம்.பூபதி  ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். அப்போது அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினர்.                 

                                   

பின்னர் அமைச்சர் நாசர் பேசியதாவது: கொரோனா தொற்றின் 3வது அலை வருமுன் காப்போம் என்ற திட்டத்தின் கீழ் நோய் வருவதற்கு முன்பே அந்த நோயை விரட்டி அடிக்கும் நோக்கத்தில் தேவையான நடவடிக்கைகளை திருவள்ளூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் தேவையான முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். தற்போது, 5 அரசு மருத்துவமனைகளில் 500 படுக்கையில் தயார் நிலையில் உள்ளன. இதேபோல் தனியார் மருத்துவமனைகளில் 1834 படுக்கை தயார் நிலையில் உள்ளது.

இதில் திருத்தணி அரசு பொது மருத்துவமனையில், 100 படுக்கைகளில், 60 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா 2வது அலையை விரட்டியதுபோல் வருமுன் காப்போம் மூலம் 3வது அலையும் தமிழக முதல்வர் தலைமையில் மருத்துவ குழுவினர் முன் களப்பணியாளர்கள் அரசு அதிகாரிகளுடன் அதை விரட்டி அடிப்போம். இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆய்வின்போது, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் ஜவகர்லால், குடும்ப நலத்துறை இயக்குனர் இளங்கோவன், தேசிய நல்வாழ்வு திட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பெரோஸ், திருத்தணி அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவர் (பொறுப்பு) ராம்பிரசாத், திருத்தணி நகர திமுக பொறுப்பாளர் வினோத்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: