அதிமுக மாஜி கவுன்சிலர் பள்ளியில் படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் பஸ் ஊழியர் கைது

திருப்பூர்: அதிமுக மாஜி கவுன்சிலர் பள்ளியில் படித்து வரும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பஸ் ஊழியரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். திருப்பூர் குருவாயூரப்பன்நகர் மகாலட்சுமிநகரை சேர்ந்த ஒருவரது 5 வயது மகள் அந்த பகுதியில் உள்ள அதிமுக மாஜி கவுன்சிலர் நடத்தி வரும் தனியார் மெட்ரிக் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். கடந்த 16ம் தேதி சிறுமியை அவரது தாயார் குளிக்க வைத்தார். அப்போது சிறுமியின் உடலில் ரத்தம் கட்டி காயம் இருந்தது.

இதனால் அதிர்ச்சியடையந்த தாய் சிறுமியை பாண்டியன்நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். டாக்டர்கள் சிறுமியை பரிசோதித்துவிட்டு, சிறுமி பாலியல் தொல்லைக்கு ஆளாகியிருப்பதாகவும், இது தொடர்பாக போலீசில் புகார் தெரிவிக்கும்படியும் அறிவுறுத்தினர். இது குறித்து சிறுமியின் தாயார் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் பள்ளியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பஸ் டிரைவர்கள், பஸ் ஊழியர்கள் என அனைவரும் வரவழைக்கப்பட்டு அடையாளம் காண்பிக்கும்படி சிறுமியிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது சிறுமி பஸ் ஊழியர் ஒருவரை அடையாளம் காண்பித்தார். இதை தொடர்ந்து போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், திருப்பூர் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (39) என்பதும், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.

Related Stories: