உத்தரப்பிரதேசத்தில் 16 லட்சம் பெண்களுக்கு ரூ1,000 கோடி சுழல்நிதி: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

லக்னோ: உத்தரபிரதேசத்தை சேர்ந்த 16 லட்சம் பெண்கள் பயனடையும் வகையில் ரூ. 1,000 கோடி சுழல்நிதியை பிரதமர் மோடி இன்று மாலை வழங்கினார். உத்தரபிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை பிரயாக்ராஜ் செல்கிறார். அங்கு சுய உதவிக் குழுக்களை சேர்ந்த சுமார் 16 லட்சம் பெண் உறுப்பினர்களுக்கு ரூ.1,000 கோடி சுழல்நிதியை வழங்கினார். இன்றைய கூட்டத்தில் 2 லட்சம் பெண்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி; பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் கட்டித் தரப்படும் வீடுகளுக்கு பெண்கள் பெயரிலேயே பத்திரப் பதிவு செய்து தருவதால் அவர்களுக்கான அதிகாரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பெண் குழந்தையை பாதுகாப்போம் - பெண் குழந்தையை படிக்க வைப்போம் திட்டம் பல மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு தாம் பிரதமராக பதவியேற்றது முதல் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளின் வளர்ச்சிக்கான பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். பெண்களின் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை கொண்டு வரவும், அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யவும், மத்திய – மாநில அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என கூறினார்.

தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட துணை ஊட்டச்சத்து உற்பத்தி மையங்களுக்கு அடிக்கல் நாட்டினார். உத்தரபிரதேச தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி அடிக்கடி மாநிலத்திற்கு வந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இவரது பயணத்திட்டம் இம்மாதம் இறுதியுடன் முடிவடைவதால் ஜனவரி முதல் அல்லது 2வது வாரத்தில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கான அட்டவணை வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: