நல்லம்பள்ளி: தர்மபுரி அருகே, சிப்காட் அமைக்க விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், அதிகாரிகளை சிறைபிடித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சிப்காட் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து, இதற்காக அப்பகுதியில் 1773 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. இப்பகுதியில் ஜவுளிப் பூங்கா மற்றும் எலக்ட்ரிக் பைக்குகள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்காக, 400 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த, சர்வே செய்து வருகின்றனர். இதில் அதியமான்கோட்டை அருகே வெத்தலைக்காரன் கொட்டாயை சுற்றியுள்ள பகுதியில் சுமார் 400ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் கையகப்படுத்த உள்ளனர். இந்த நிலங்களில் நெல், கரும்பு, கேழ்வரகு, மரவள்ளி கிழங்கு, தென்னை உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்து வருகின்றனர். இதனால் தங்கள் விளை நிலங்களை கையகப்படுத்தாமல், இதே பகுதியில் உள்ள தரிசு நிலங்களில் சிப்காட் அமைக்க வேண்டும் என விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர்.