`முடிஞ்சா என்னை கைது செய்து பார்’ போலீசாருக்கு சவால்விட்ட ரவுடி குண்டாசில் கைது: இன்ஸ்டாகிராம் பதிவால் சிக்கினார்

பெரம்பூர்: இன்ஸ்டாகிராம் பக்கத்தில் `முடிஞ்சா என்னை கைது செய்து பார்’ என போலீசாருக்கு சாவல்விட்ட ரவுடி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் கபிலர் தெருவை சேர்ந்தவர் ஹரி (எ) ஹரிகரன் (22). இவர் மீது சென்னை செம்பியம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்கு உள்ளது. மேலும், செம்பியம் பகுதியில் 2020ம் ஆண்டு நடைபெற்ற சந்தோஷ் கொலை வழக்கு, வழிப்பறி, 2 கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், செம்பியம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வியாபாரிகளுக்கு தொடர்ந்து ஹரிஹரன் தொல்லை கொடுத்து வருவதாக செம்பியம் இன்ஸ்பெக்டர் ஐயப்பனுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி நேற்று முன்தினம் ஹரிஹரனை போலீசார் தேடி வந்தனர்.

இதனிடையே, போலீசார் தேடுவதை அறிந்த ரவுடி ஹரிஹரன், கடந்த அக்டோபர் மாதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், `முடிஞ்சா என்னை கைது செய்து பார்’ என பதிவு செய்து போலீசாருக்கு சாவல்விட்டுள்ளார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஐயப்பன் அவரை தீவிரமாக தேடி வந்தார். அதன்படி கடந்த அக்டோபர் மாதம் பெரம்பூர் ரமணா நகரில் வீட்டில் பதுங்கியிருந்த ஹரிஹரனை போலீசார் சுற்றிவளைத்து பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து, ஹரிகரன் மீது பல்வேறு வழக்கு நிலுவையில் இருப்பதால் அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க சென்னை மாநகராட்சி கமிஷனருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், ஹரிகரனை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories: