அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நாளை கார்த்திகை மாத தெப்ப திருவிழா-ஏற்பாடுகள் தீவிரம்

குளித்தலை : குளித்தலை அடுத்த அய்யர்மலையில் காவிரி தென்கரையில் அமைந்துள்ள சிவ தலங்களில் முதன்மையானது சைவசமய குரவர்களில் அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசரால் நேரடியாக பாடல் பெற்றதும் வைர பெருமாள் மற்றும் சிற்றராயர் என்ற சிவ பக்தர்களால் பூஜிக்கப் பெற்றதும், தேவர்களாலும் முனிவர்களாலும், மன்னர்களாலும் வழங்கப் பெற்றதும், வேண்டுவோருக்கு வேண்டும் வண்ணம் அருள் பாலிக்கும் ஐவர்மலை எனப் போற்றப்படும் சுரும்பார் குழலி உடனுறை ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இக்கோவில் அருகே தெப்பக்குளம் உள்ளது.

இந்த தெப்பக்குளத்தில் 20 ஆண்டுகளுக்கு முன் கார்த்திகை மாத தெப்ப உற்சவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. சமீபகாலமாக போதிய மழை இன்மையால் தெப்பக்குளம் வறண்ட நிலையில் இருந்து வந்தது. இந்நிலையில் சென்ற மாதம் தொடர் மழை பெய்ததால் ரத்தினகிரீஸ்வரர் மலை உச்சியிலிருந்து வழியாக வரும் தண்ணீர் நேரடியாக தெப்பக்குளத்தில் வந்து விழுவதற்கு அறநிலைய துறை அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தண்ணீர் செல்லும் வகையில் ஏற்பாடு செய்தனர். இதனால் தற்போது முற்றிலும் தெப்ப குளம் நிரம்பி வழிந்த நிலையில் உள்ளது.

இந்நிலையில் கோவில் குடி பாட்டுக்கரர்கள், பொதுமக்கள், பக்தர்கள் இந்து அறநிலையத்துறைக்கு கார்த்திகை கடைசி நாளன்று தெப்பத்திருவிழா நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்திருந்தனர்.இதனை ஏற்ற இந்து அறநிலையத்துறை தெப்பத் திருவிழா நடத்த அனுமதி அளித்ததால் நாளை கார்த்திகை மாதம் 29ம் நாள் புதன்கிழமை இரவு 7 மணி அளவில் ரத்தினகிரீஸ்வரர் திருக்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளத்தில் தெப்ப உற்சவம் விமர்சையாக நடைபெற உள்ளது.

இதையொட்டி நூற்றுக்கணக்கில் தகர டின்கள் கொண்டு வரப்பட்டு தெப்பம் அமைப்பதற்கான முன்ஏற்பாட்டினை பணியாளர்கள் தீவிரமாக செய்து வருகின்றனர்.விழாவிற்கான ஏற்பாட்டினை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சூரிய நாராயணன், செயல் அலுவலர்(ஆட்சி) சிவப்பிரகாசம் மற்றும் குடி பாட்டுக்காரர்கள், உபயதாரர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: