கத்ரீனாவுக்கும், பாஜக எம்எல்ஏவுக்கும் 2008ல் திருமணம் நடந்ததா?.. போலி திருமண சான்றிதழ் குறித்து போலீஸ் விசாரணை

இந்தூர்: கடந்த 2008ல் நடிகை கத்ரீனாவுக்கும், பாஜக எம்எல்ஏவுக்கும் திருமணம் நடந்ததாக வெளியான போலி திருமண சான்றிதழ் குறித்து இந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாலிவுட் நடிகை கத்ரீனா கைப்புக்கும், நடிகர் விக்கி கவுஷலுக்கும்  வரும் 9ம் தேதி ராஜஸ்தானில் திருமணம் நடைபெற உள்ளது. அதனால், மும்பையில்  இருந்து இருவீட்டாரும் நேற்று ராஜஸ்தான் வந்து சேர்ந்தனர். திருமண  சடங்குகள் சவாய் மாதோபூர் அடுத்த பார்வாரா கோட்டையில் உள்ள சிக்ஸ் சென்ஸ்  ரிசார்ட்டில் நடைபெற்று வருகிறது. திருமணத்திற்கு இரண்டு நாட்கள் உள்ள நிலையில், கத்ரீனா கைப்புக்கும், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த பாஜக எம்எல்ஏ ரமேஷ் மெண்டோலா என்பவருக்கும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே திருமணம் நடந்ததாக நேற்று சமூக வலைதளத்தில் செய்திகள் பரவின.

மேலும், திருமணம் நடந்ததற்கான திருமண பதிவு சான்றின் நகலும், சமூக வலைதளத்தில் பரப்பி விடப்பட்டன. அதில், இந்தூர் மாநகராட்சி நிர்வாகத்தால் வழங்கப்பட்ட இந்த திருமணச் சான்றிதழின்படி கடந்த 2008ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி எம்எல்ஏ ரமேஷ் மெண்டோலாவுக்கும், கத்ரீனா கைப்புக்கும் திருமணம் நடந்தது. அதே ஆண்டு டிசம்பர் 11ம் தேதி பத்திரப்பதிவு அலுவலகத்தில் திருமணத்தை பதிவு செய்ததாக கூறப்பட்டுள்ளது. இந்தத் திருமணச் சான்றிதழ் தேசிய அளவில் ஊடகங்களிலும் தலைப்புச் செய்தியாக வலம் வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த இந்தூர் மாநகராட்சி அதிகாரிகள், இவ்விவகாரத்திற்கு மறுப்பு அறிக்கை தரும் அளவிற்கு சென்றது.

இதுகுறித்து இந்தூர் மாநகராட்சியின் திருமண பதிவாளர் நட்வர் சர்தா கூறுகையில், ‘ஊடகங்களில் காட்டப்படும் திருமண சான்றிதழ் போலியானது. மாநகராட்சி நிர்வாகத்தால், அந்த திருமண சான்றிதழ் வழங்கப்படவில்லை. யாரோ ஒருவரது திருமண சான்றிதழை ஸ்கேன் செய்து, அதனை சில மென்பொருள்களின் உதவியுடன் பாலிவுட் நடிகை மற்றும் எம்எல்ஏவின் பெயரை இணைத்து வெளியிட்டுள்ளனர். ஏற்கனவே கடந்த சில ஆண்டுக்கு முன் நடிகர் சல்மான் கானுக்கும், நடிகை ஒருவருக்கும் திருமணம் நடந்ததாக எங்களது மாநகராட்சி திருமண சான்றிதழ் அளித்ததாக போலி செய்தி வெளியானது. தற்போதைய விவகாரம் தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளோம். அவர்கள் விசாரித்து வருகின்றனர்’ என்றார்.

Related Stories: