திருமலை: திருச்சானூரில் நடந்த 6வது நாள் பிரமோற்சவத்தில் கருட வாகனத்தில் பத்மாவதி தாயார் எருந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, இன்று காலை சூரியபிரபை வாகனத்திலும், இரவு சந்திரபிரபை வாகனத்திலும் சுவாமி அருள் பாலிக்கிறார். ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி அடுத்த திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் ஆண்டுதோறும் வருடாந்திர பிரமோற்சவம் நடைபெற்று வருகிறது. அதன்படி, இந்த ஆண்டிற்கான பிரமோற்சவம் கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பிரமோற்சவத்தின் 5ம் நாளான நேற்று முன்தினம் காலை பல்லக்கு உற்சவத்தில் நாச்சியார் திருக்கோலம், இரவு யானை(கஜ) வாகனத்தில் மகாலட்சுமி அலங்காரத்தில் பத்மாவதி தாயார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.