ஆளும் கட்சி எம்எல்ஏ மிரட்டல் பேச்சால் ஆந்திராவில் பரபரப்பு சந்திரபாபு கழுத்தை அறுத்து நாக்கை வெட்டி விடுவேன்...

சித்தூர்: ‘ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுவின் கழுத்தை அறுத்து விடுவேன், நாக்கை வெட்டி விடுவேன்,’ என்று ஆளும் கட்சி எம்எல்ஏ. பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், சித்தூரில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகத்தில் எஸ்சி பிரிவு மாவட்ட தலைவர் சப்தகிரி பிரசாத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபுவை ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த  பூதலப்பட்டு எம்எல்ஏ பாபு நேற்று (நேற்று முன்தினம்) தரைக்குறைவாக தகாத வார்த்தைகளால் விமர்சனம் செய்துள்ளார். சந்திரபாபு 14 ஆண்டுகள் முதல்வராக பதவி வகித்தவர். 7 முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்று 35 ஆண்டுகளாக மக்களுக்கு சேவை செய்தவர். அவருடைய கழுத்தை அறுத்து விடுவேன், நாக்கை வெட்டி விடுவேன் என பேசி இருப்பது கண்டிக்கத்தக்கது.

பாபு எம்எல்ஏ.வாக வெற்றி பெறுவதற்கு முன்பு ஜில்லா பரிஷத் தேர்தலில் மாபெரும் தோல்வி அடைந்தவர். அவரிடம் பணம் பெற்று தற்போதைய ஆளும் கட்சியான, ஒய்எஸ்ஆர் காங்கிரசார் அவருக்கு எம்எல்ஏவாக போட்டியிட வாய்ப்பு வழங்கினர். இரண்டரை ஆண்டுகள் அவர் எம்எல்ஏவாக பதவி வகித்து வருகிறார். ஊழல் செய்து பல நூறு கோடி ரூபாய் சம்பாதித்து வருகிறார். தனது பேச்சுக்காக இவர், சந்திரபாபுவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், மாபெரும் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார். சந்திரபாபுவுக்கு ஆளும் கட்சி எம்எல்ஏ. விடுத்துள்ள மிரட்டல், ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இவ்வாறு அவர் மிரட்டியதற்கான ஆதாரம் வெளியிடப்படவில்லை.

Related Stories: