பாஜ நிர்வாகி வீட்டில் துப்பாக்கி சூடு? கோவையில் பரபரப்பு

கோவை: கோவை பாஜ நிர்வாகி வீட்டில் துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்பட்ட தகவலால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை சுண்டக்காமுத்தூர் பகுதியை சேர்ந்த பாஜ பிரமுகர் ஜெகதீஷ் (43). இவர் பாஜ குனியமுத்தூர் மண்டல பொதுச்செயலாளராக உள்ளார். இவரது மனைவி பூங்கொடி. 2 குழந்தைகள் உள்ளனர். ஜெகதீஷ் மணல் வியாபாரம் உள்பட பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். தீபாவளி பண்டிகைக்காக தனது தாய் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து இருந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளித்தார்.

சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பார்வையிட்டனர். வீட்டின் சுவற்றில் பல இடங்களில் ஒட்டை விழுந்திருப்பதும் தெரியவந்தது. அந்த பகுதியில் சோதனை செய்தததில் சிறிய வகை துப்பாக்கி தோட்டாக்கள் வீட்டின் அருகே கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாஜ நிர்வாகி வீட்டில் துப்பாக்கி சூடு நடந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விசாரணை செய்ததில், தீபாவளியை கொண்டாட அருகேயுள்ள வீட்டின் முன்பு உள்ள மின் கம்பகத்தில் பலூன்களை கட்டிவைத்து ரைபிள் துப்பாக்கியால் சுட்டு விளையாடியுள்ளனர். இதில் குறி தவறி துப்பாக்கி குண்டுகள் ஜெகதீசன் வீட்டின் ஜன்னல் கதவில் பட்டு உடைந்தது தெரியவந்தது. இது தொடர்பாக பேரூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: