புதுடெல்லி:காலநிலை மாநாடு, ஜி-20 மாநாடு ஆகியவற்றில் பங்கேற்பதற்காக இத்தாலி மற்றும் ஸ்காட்லாந்து சென்ற பிரதமர் மோடி தனது ஐந்து நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இன்று நாடு திரும்பினார்.இத்தாலியின் ரோம் நகரில் ஜி-20 உச்சி மாநாடு மற்றும் ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காலநிலை மாற்ற மாநாட்டில் பங்கேற்பதற்காக 5 நாள் பயணமாக பிரதமர் மோடி வௌிநாடுகளுக்கு சென்றார். இத்தாலி மாநாட்டை முடித்து கொண்டு கிளாஸ்கோ மாநாட்டில் நேற்று மீண்டும் உரையாற்றிய பிரதமர், ‘ஒரே சூரியன், ஒரே உலகம், ஒரே மின்தொடரமைப்பு திட்டத்தை கொண்டு வரவேண்டும். இதன்மூலம், சூரிய மின்சக்தியை அனைவரும் பயன்படுத்தமுடியும். உலகம் முழுவதும் எங்கெல்லாம் மின் உற்பத்தி செய்ய முடியும் என்பதை கணக்கீடு செய்யும் முறையை, இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ வழங்கும்’ என்றார்.