திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 5 வருடங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 128 வழக்குகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன என்று சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் கூறினார். கேரளாவில் தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று புரட்சி மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த ரமா ஒரு கேள்வி எழுப்பினார். கடந்த 5 வருடங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது பதிவு செய்யப்பட்ட எத்தனை வழக்குகள் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று கேட்டார்.
இதற்கு பதிலாளித்து முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: கடந்த 5 வருடங்களில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மீது பதிவு செய்யப்பட்ட 128 வழக்குகள் வாபஸ் பெறப்பட்டு உள்ளன. இதில் அமைச்சர்களுக்கு எதிராக 24 வழக்குகளும், எம்எல்ஏக்களுக்கு எதிராக 104 வழக்குகளும் வாபஸ் பெறப்பட்டு உள்ளன. கடந்த 2007ம் ஆண்டு முதல் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றார்.
இது தவிர இடது சாரி கூட்டணிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 848 வழக்குகளும், காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பதிவு ெசய்யப்பட்ட 55 வழக்குகளும், பாஜவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 15 வழக்குகளும், எஸ்டிபிஐக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளும், பிடிபி கட்சிக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள 2 வழக்குகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டிக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 13 வழக்குகளும், உயர்கல்விதுறை அமைச்சர் பிந்துவுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட 7 வழக்குகளும், தனக்கு (முதல்வர்) எதிராக பதிவு செய்யப்பட்ட 6 வழக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றார்.