ஆர்யன்கானை விடுவிக்க ரூ.25 கோடி பேரம் வான்கடே மீது குற்றம்சாட்டிய சாட்சியிடம் வாக்குமூலம் பதிவு: இரவு முழுவதும் 8 மணி நேரம் நடந்தது

மும்பை: ஆர்யன்கானை விடுவிக்க ரூ.25 கோடி கேட்டு வான்கடே மிரட்டியதாக கூறிய முக்கிய சாட்சியிடம் 8 மணி நேரம் போலீசார் வாக்கு மூலம் பதிவு செய்தனர். மும்பை அருகே கப்பலில்  போதை விருந்து நடத்தியதாக தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் (என்சிபி) நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் இருந்து ஆர்யன்கானை விடுவிக்க ரூ.25 கோடி கேட்டதாக என்சிபி அதிகாரி சமீர் வான்கடே மீது அமைச்சர் நவாப் மாலிக் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், என்சிபி மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடே உள்ளிட்ட அதிகாரிகள் மீது பணம் கேட்டு மிரட்டியதாக 4 புகார் மனுக்கள் நேற்று முன்தினம் வந்ததாக மும்பை போலீசார் தெரிவித்தனர். இதில் ஒன்று இந்த வழக்கின் முக்கிய சாட்சியான பிரபாகர் செயில் என்பவரால் அனுப்பப்பட்டிருந்தது. இவர் நேற்று முன்தினம் மாலை மும்பை போலீசில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். இந்த வாக்குமூலம் நேற்று அதிகாலை 3 மணி வரையில் 8 மணி நேரம் பதிவு செய்யப்பட்டது.

வான்கடேயிடம்விசாரணை:  அமைச்சர் நவாப் மாலிக் சுமத்திய குற்றச்சாட்டுகள் தொடர்பாக மகாராஷ்டிரா விஜிலென்ஸ் குழு, வான்கடேவிடம்  நேற்று 4 மணி நேரம் விசாரித்ததாகவும்,  பெரும்பாலான கேள்விகளுக்கு அவர் பதில் அளிக்கவில்லை எனகூறப்படுகிறது.

மோதல் புதியதல்ல: ஷாரூக்கான் கடந்த 2011ம் ஆண்டு குடும்பத்தினருடன் ஹாலந்து, லண்டன் சென்று விட்டு மும்பைக்கு திரும்பினார். அப்போது, சுங்கத்துறை உதவி கமிஷனராக இருந்த வான்கடே, ஷாரூக், அனுஷ்கா சர்மா உள்ளிட்டோரை சோதனை செய்து, வெளிநாட்டு பொருட்கள், நகைகளுக்கு சுங்க வரி செலுத்தாமல் இருந்ததை கண்டுபிடித்தார். 20 லக்கேஜ்களுடன் வந்த ஷாரூக்கிடம் பல மணி நேரம் விசாரித்தார். சுங்க வரியாக ரூ.1.5 லட்சம் செலுத்திய பிறகே விடுவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

* ‘தாயின் விருப்பப்படி திருமணம் செய்தேன்’

தன்னை  ஒரு முஸ்லிம் என கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து வான்கடே அளித்துள்ள விளக்கத்தில், ‘2006ம் ஆண்டில் டாக்டர் சபானா குரேஷியை திருமணம் செய்தேன். பின்னர், நீதிமன்றம் மூலம் 2016ம் ஆண்டில் விவகாரத்து பெற்று, 2017ல் மராத்தி நடிகை கிராந்தி ரெட்காரை திருமணம் செய்தேன். தனது தாய் ஒரு முஸ்லிம், தந்தை இந்து. எனது தாயின் விருப்பப்படிதான் நான் முஸ்லிம் முறைப்படி திருமணம் செய்தேன். எனக்கு உருது தெரியாது. முஸ்லிம் முறைப்படி நடந்த திருமண சான்றிதழில், எனது பெயர் எப்படி எழுதப்பட்டிருந்தது என எனக்கு தெரியாது,’ என தெரிவித்துள்ளார்.

* இன்று ஜாமீன் கிடைக்குமா?

போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணை, மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்றும் நடந்தது. இவருடன் கைது செய்யப்பட்டுள்ள அர்பாஸ் மெர்ச்சண்ட், முன்மும் தமேச்சாவின் ஜாமீன் மனுக்களும் விசாரிக்கப்பட்டன. 3 பேரின் வாதங்களும் நேற்றுடன் முடிந்தது. தேசிய போதை பொருள் தடுப்பு துறை சார்பில் கூடுதல் சொலிசிட்டார் ஜெனரல் அனில் சிங் இன்று வாதிடுகிறார். இதைத் தொடர்ந்து, நீதிபதி உத்தரவு பிறப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: