வெளிநாடுகளுக்கு இந்த ஆண்டு இறுதியில் தடுப்பூசி ஏற்றுமதி: ஒன்றிய அரசு தகவல்

புதுடெல்லி:  வெளிநாடுகளுக்கான தடுப்பூசி ஏற்றுமதி இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என்று அரசு உயரதிகாரி தெரிவித்துள்ளார்.  நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக, கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த சுகாதார ஊழியர்களுக்கும், பிப்ரவரி 2ம் தேதி முதல் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. இதனை தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வயதினருக்கும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

கடந்த 21ம் தேதி 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி நாடு சாதனை படைத்துள்ளது. 75சதவீதத்துக்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த அனைவருக்கும் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 9 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தகுதிவாய்ந்த அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 31 சதவீதம்  பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் வெளிநாடுகளுக்கு  கொரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இது தொடர்பாக அரசு உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதற்கு ஒன்றிய அரசு உறுதிபூண்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த நடவடிக்கை தொடங்கும். எனினும் நாட்டின் தடுப்பூசி திட்டத்திற்கான உள்நாட்டு தேவைகளுக்கு எதிராக வெளிநாடுகளுக்கான தடுப்பூசி ஏற்றுமதி சமநிலைப்படுத்தப்பட வேண்டும்” என்றார்.

Related Stories: