தொடர் மழையால் பழநி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி

பழநி : தொடர் மழையின் காரணமாக பழநி பகுதியில் உள்ள அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.பழநி நகர் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பழநி பகுதியில் உள்ள அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 67 அடி உயரமுள்ள வரதமாநதி அணை தனது முழுக் கொள்ளவை எட்டி நிரம்பி வழிகிறது. அணைக்கு வினாடிக்கு 200 கன அடி நீர் வருகிறது. வரும் நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் பெய்த மழையின் அளவு 45 மி.மீ., பதிவாகி உள்ளது.

65 அடி உயரமுள்ள பாலாறு-பொருந்தலாறு அணையின் நீர்மட்டம் 56.20 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 322 கனஅடி நீர் வருகிறது. 9 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் பெய்த மழையின் அளவு 47 மி.மீ., பதிவாகி உள்ளது. 80 அடி உயரமுள்ள குதிரையாறு அணையின் நீர்மட்டம் 65.44 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 23 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணைப்பகுதியில் பெய்த மழையின் அளவு 12 மி.மீ., பதிவாகி உள்ளது.

பருவமழை துவங்கும் முன்பே அணைகள் நிரம்பும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பருவமழை காலங்களில் ஏற்படும் நீர்வரத்தை பாதுகாப்பாக வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் ஆயத்த நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அணைகளுக்கு நீர்வரத்து ஏற்பட்டிருப்பதால் பழநி பகுதியில் விவசாய பணிகள் துவங்கி உள்ளன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Related Stories: