சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு பாஜக அரசின் தவறான வரி கொள்கையே காரணம் என்று ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் வர்த்தக சங்கம் சார்பில் சென்னையில் பொருளாதாரம் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம்; பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பையே ஒன்றிய அரசு முக்கிய வரி வருவாயாக கொண்டு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார். பெட்ரோல், டீசல் மீது 33% வரி விதிப்பது சரியல்ல என்று கூறிய அவர் தவறான வரி கொள்கையும், பேராசையுமே வரலாறு காணாத விலையேற்றத்துக்கு காரணம் என்றார்.