பாஜக அரசின் தவறான வரி கொள்கையே பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு காரணம்: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை: பெட்ரோல், டீசல் விலை உயர்விற்கு பாஜக அரசின் தவறான வரி கொள்கையே காரணம் என்று ஒன்றிய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ் வர்த்தக சங்கம் சார்பில் சென்னையில் பொருளாதாரம் குறித்த சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ப.சிதம்பரம்; பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பையே ஒன்றிய அரசு முக்கிய வரி வருவாயாக கொண்டு செயல்படுகிறது என்று குற்றம் சாட்டினார். பெட்ரோல், டீசல் மீது 33% வரி விதிப்பது சரியல்ல என்று கூறிய அவர் தவறான வரி கொள்கையும், பேராசையுமே வரலாறு காணாத விலையேற்றத்துக்கு காரணம் என்றார்.

கடந்த 4.1/2 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு மூலம் ஒன்றிய அரசு 4.5 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளது என்றும் ப.சிதம்பரம் தெரிவித்தார். அதேபோல ஜிஎஸ்டி கவுன்சில் அதிகாரம் இல்லாத அமைப்பாக இருக்கிறது என்றும் மாநில நிதி அமைச்சர்களின் கருத்துகள் ஏற்கப்படுவதில்லை என்றும் ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

Related Stories: