போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து 5 வருடமாக தலைமறைவான பிரபல கொள்ளையன் கைது

அண்ணாநகர்: சேத்துப்பட்டு மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (37), பிரபல வழிபறி கொள்ளையன். இவர்மீது அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், சேத்துப்பட்டு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாத இவரை கைது செய்ய அமைந்தகரை போலீசாருக்கு கடந்த 2016ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில், சேத்துப்பட்டு மங்களபுரத்தில் உள்ள கூட்டாளியை சந்திக்க நேற்று அதிகாலை 3 மணி  அளவில் செந்தில்குமார் வருவது தெரிந்தது. அதன்பேரில், ரகசியமாக கண்காணித்த போலீசார், அங்கு வந்த செந்தில்குமாரை சுற்றி வளைத்தனர்.  போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற அவரை, விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: