சேத்துப்பட்டில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் ரூ.72 லட்சம் கொள்ளை

சென்னை: சென்னை அண்ணாநகரை சேர்ந்தவர் ஆசிஷ் பன்சால் (55). இவர், வாகன பேட்டரிகளுக்கான அலுமினிய லெட் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு, ஆந்திரா மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலைகள் உள்ளன. இதன் தலைமை அலுவலகம் சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் உள்ள 7 மாடி கட்டிடத்தின் 4வது மாடியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தை நேற்று காலை, ஊழியர் விக்டர்  என்பவர் திறக்க வந்தபோது, ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து ஆசிஷ் பன்சாலுக்கு தகவல் அளித்தார். அவர் விரைந்து வந்து பார்த்தபோது, அலுவலகத்தின் லாக்கர் திறக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.72 லட்சம் மாயமாகி இருந்தது. இதுகுறித்து சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார் கைரேகை நிபுணர்களுடன் வந்து அலுவலகத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: