நள்ளிரவில் செல்போனில் நீண்டநேரம் பேச்சு கண்டித்த கணவர் மார்பில் கத்தியால் குத்திய மனைவி: கைது செய்து சிறையில் அடைப்பு

இடைப்பாடி: சேலம் மாவட்டம், இடைப்பாடி அடுத்த மசையன்தெரு காட்டூர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (32), விசைத்தறி தொழிலாளி. கிருஷ்ணகிரி பாரீஸ் நகரை சேர்ந்தவர் இலக்கியா(26). இவர் குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படிக்க பஸ்சில் சென்றபோது, அந்த பஸ் கண்டக்டராக இருந்த பாலமுருகனுடன் பழக்கம் ஏற்பட்டு காதலித்துள்ளனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த இவர்கள், பெற்றோர் எதிர்ப்பை மீறி கடந்த 2 ஆண்டுக்கு முன், திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே, கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால், சில மாதங்களுக்கு முன், இலக்கியா கணவரை பிரிந்து குழந்தையுடன் கிருஷ்ணகிரியில் உள்ள தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மேலும், அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், கணவர் தன்னை கொடுமைப்படுத்துவதாக புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து பாலமுருகனை கைது செய்தனர். சிறையில் அடைக்கப்பட்ட அவர், சில வாரங்களுக்கு முன்பு தான், ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன் குழந்தையுடன் கணவர் வீட்டிற்கு வந்த இலக்கியா, வழக்கை வாபஸ் பெறுவதாகவும் மீண்டும் சேர்ந்து வாழலாம் என கூறியுள்ளார். அதை பாலமுருகன் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து, கடந்த 24ம் தேதி நள்ளிரவில், இலக்கியா செல்போனில் நீண்ட நேரம் சிரித்து பேசிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்த பாலமுருகன், இந்த நேரத்தில் யாரிடம் செல்போனில் பேசுகிறாய் என்று கண்டித்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த இலக்கியா, கத்தியை எடுத்து பாலமுருகனின் மார்பில் குத்தினார். அவரது அலறல் கேட்டு ஓடி வந்த பாலமுருகனின் தாய் ஜோதி, இலக்கியாவை தடுத்துள்ளார். அக்கம் பக்கத்தினர் வந்து பாலமுருகனை மீட்டு இடைப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக, சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். புகாரின் பேரில், இடைப்பாடி போலீசார் வழக்குப்பதிந்து இலக்கியாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

Related Stories: