ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு கேடயம், சான்றிதழ் வழங்கி எஸ்பி பாராட்டு

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி தொடங்கி இம்மாதம் 10ம் தேதி வரை சிறப்பாக பணியாற்றிய இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள், கணினி ஆபரேட்டர்கள், சிசிடிஎன்எஸ், நிலைய எழுத்தர், நீதிமன்ற காவலர் போக்குவரத்து பிரிவு, குற்றப்பிரிவு, நடப்பு எழுத்தர், ரோந்துப் பணி ஆகியவற்றில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கான பாராட்டு விழா நேற்று முன்தினம் ராணிப்பேட்டை எஸ்பி அலுவலகத்தில் நடந்தது.

எஸ்பி தீபா சத்யன் தலைமை தாங்கி மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு கேடயம், பாராட்டு சான்றிதழ், மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கினார். இதில் ஆற்காடு டவுன் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி, ராணிப்பேட்டை எஸ்ஐ கோவிந்தசாமி, சிசிடிஎன்எஸ் பிரிவில் ராணிப்பேட்டை பெண்காவலர் கெஜலட்சுமி, நெமிலி போலீஸ் நிலைய காவலர் பாலசந்தர், ராணிப்பேட்டை நீதிமன்ற காவலர் மீனா, அரக்கோணம் டவுன் காவலர் ராஜ்குமார், நிலைய எழுத்தர் பிரிவில் ராணிப்பேட்டை காவலர் ஜெயவேல், அரக்கோணம் டவுன் காவலர் தியாகராஜன், ரோந்துப் பணியில் சிறப்பாக ஈடுபட்ட ஆற்காடு டவுன் காவலர் தனசேகர், அரக்கோணம் டவுன் காவலர் தங்கராஜ், குற்றப்பிரிவில் அரக்கோணம் தாலுகா எஸ்எஸ்ஐ சரவணன், போக்குவரத்து பிரிவில் ராணிப்பேட்டை போக்குவரத்து எஸ்எஸ்ஐ கணேசன் ஆகியோரின் பணியை எஸ்பி தீபா சத்யன் பாராட்டினார்.

அதேபோல், ஆற்காடு காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வருமான வரித்துறை அதிகாரி என்று கூறி பணம் மோசடியில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்த ஆற்காடு, ரத்தினகிரி, வாலாஜா போலீஸ் நிலையங்களைச் சேர்ந்த 9 காவலர்களையும் பாராட்டி நினைவுப் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து, ஆற்காடு மற்றும் வாழப்பந்தல் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வழிப்பறியில் ஈடுபட்டவர்களை கைது செய்த ஆற்காடு டவுன் போலீஸ், வாழப்பந்தல், வாலாஜா, ரத்தினகிரி போலீசார் 8 பேருக்கும் சான்றிதழ் வழங்கி எஸ்பி தீபா சத்யன் பாராட்டு தெரிவித்தார்.

Related Stories: