நகராட்சி மாட்டு சந்தை மீண்டும் திறப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தை, 50 நாட்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தையில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளில் சந்தை நாள் செயல்படுகிறது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்தும் மாடுகள் வரத்து அதிகளவு இருக்கும். வாரந்தோறும் சுமார் 3 ஆயிரம் மாடுகள் வரை விற்பனைக்கு வருவதால் இதன் மூலம் வாரத்தில் ரூ. 3 கோடி வரையிலும் வர்த்தகம் ஏற்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் மாதம் துவக்கத்திலிருந்து கொரோனா தடுப்பு நடவடிக்கை கட்டுப்பாட்டால் முடப்பட்டது. நகராட்சி மாட்டு சந்தை தொடர்ந்து செயல்பட தடையால், ஒன்றரை மாதத்தில் மாடு விற்பனை இல்லாமல், சுமார் ரூ.18 கோடி வரையிலும் வர்த்தகம் பாதிக்கப்பட்டது.  இந்நிலையில், கொரோனா ஊரடங்கு பெருமளவு தளர்வு ஏற்படுத்தப்பட்டதால், சுமார் ஒன்றரை மாதத்திற்கு பிறகு நேற்று முதல் மீண்டும் நகராட்சி மாட்டு சந்தை செயல்பட துவங்கியது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மட்டுமின்றி ஆந்திரா மாநிலத்திலிருந்தும் மாடுகள் அதிகளவு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. ஆனால், கேரளா வியாபாரிகளுக்கு தடையால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்த வியாபாரிகள் மாடுகளை குறிப்பிட்ட விலை நிர்ணயித்து வாங்கி சென்றனர். இதனால் மாடு விற்பனை விறுவிறுப்புடன் நடந்தது.

இதில் பசுமாடு ரூ.28 ஆயிரம் வரையிலும், காளை மாடு ரூ.30 ஆயிரம் வரையிலும், எருமை ரூ.28 ஆயிரம் வரையிலும், கன்று குட்டி ரூ.15 ஆயிரம் வரையிலும் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: