புதுடெல்லி: ‘தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.5,231 கோடியை உடனடியாக விடுவிக்கும்படி ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலிடம், தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வலியுறுத்தி உள்ளார். தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, நேற்று டெல்லி ஒன்றிய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை சந்தித்து பேசினார். பின்னர், அவர் அளித்த பேட்டி வருமாறு: தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ரூ.5,231 கோடியை விடுவிக்கும்படி ஒன்றிய அமைச்சரிடம் மனு வழங்கினேன். விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்து அவற்றை தனியார் அறவை நிறுவனங்களுக்கு தமிழக அரசு அனுப்புகிறது. இதற்காக, கடந்த 2005ம் ஆண்டு முதல் பச்சரிசி குவிண்டல் ஒன்றுக்கு ரூ.5ம், புழுங்கல் அரிசிக்கு குவிண்டல் ஒன்றுக்கு ரூ.10ம் ஒன்றிய அரசு வழங்கி வருகிறது.