சத்தியமங்கலம் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து: தமிழக- கர்நாடக போக்குவரத்து பாதிப்பு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் தமிழகம்- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோயிலை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக இரு மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

நேற்று மதியம் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருந்து மரத்துண்டுகள் பாரம் ஏற்றிய லாரி கோவை வர புறப்பட்டது. திம்பம் மலைப்பாதை வழியாக வந்தது. 23வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் கவிழ்ந்தது. இதனால் மரத்துண்டுகள் சாலையில் சிதறின. இதன் காரணமாக மற்ற வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்த ஆசனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேர போராட்டத்திற்கு பின் கிரேன் மூலம் லாரி மீட்கப்பட்டது. திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் தமிழக- கர்நாடக மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: