கொரோனாவில் இருந்து மீண்ட பாஜக மாஜி அமைச்சர் தூக்கிட்டு தற்கொலை

ராய்ப்பூர்: முன்னாள் அமைச்சரும் பாஜக தலைவருமான ராஜிந்தர்பால் சிங் பாட்டியா, சட்டீஸ்கரில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சட்டீஸ்கர் மாநில முன்னாள் அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான ராஜிந்தர்பால் சிங் பாட்டியா, கடந்த சில வாரங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார். அதன்பின், கொரோனா பாதிப்பில் இருந்து குணப்படுத்தப்பட்டு வீடு திரும்பினார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது.

இந்நிலையில் சட்டீஸ்கரில் சௌரியா டவுனில் தனது இளைய சகோதரரின் பாராமரிப்பில் இருந்த ராஜிந்தர்பால் சிங் பாட்டியா, நேற்றிரவு திடீரென பேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் ராஜிந்தர்பால் சிங் பாட்டியாவின் சடலத்தை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். பாட்டியாவின் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

இவரது மறைவுக்கு பாஜக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவர், ராஜ்நந்த்கானில் உள்ள குஜ்ஜி சட்டமன்றத் தொகுதியில் இருந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில போக்குவரத்து அமைச்சராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: