புதுடெல்லி: ‘தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகனை (ஜெயராஜ், பென்னிக்ஸ்) போலீசார் கைது செய்து தாக்கியது, பின்னர், அவர்கள் சிறையில் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது சம்பந்தப்பட்ட பிரதான வழக்கு, மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் காவலர் ரகு கணேஷ், உச்ச நீதிமன்றத்தில் சில தினங்களுக்கு முன் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், ‘குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் நீதிமன்ற காவலை, நீதிபதிகள் முன்னிலையில் நேரில் ஆஜர்படுத்தாமல் நீட்டித்துக் கொள்ளலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். ’ என கூறியுள்ளார்.