புதுடெல்லி: கடந்த 2015ம் ஆண்டு நடந்த கோகுல் ராஜ் கொலை வழக்கு விசாரணையை மூன்று மாதத்தில் முடித்து வைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல் ராஜ் காதல் விவகாரத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி பள்ளிப் பாளையம் அருகே தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் யுவராஜ் உட்பட 20 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் 5 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக இருந்த யுவராஜை, தீவிர தேடுதலுக்கு பிறகு போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் யுவராஜுக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கினாலும், தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.