மஞ்சூர் பகுதியில் பூத்து குலுங்கும் ரெட்லீப் மலர்கள்-சுற்றுலா பயணிகள் பரவசம்

மஞ்சூர் : சாலையோரங்களில் பூத்து குலுங்கும் ரெட்லீப் மலர்கள் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்த்து வருகிறது.நீலகிரி  மாவட்டம் மஞ்சூர் சுற்றுப்புற பகுதிகளில் தற்போது நிறம் மாறும் தன்மை கொண்ட  ரெட்லீப் மலர்கள் ஏராளமாக பூத்துள்ளது. ஊட்டி மஞ்சூர் சாலையில் சாம்ராஜ்,  பெங்கால்மட்டம், தாய்சோலா, அப்பர்பவானி சாலை மற்றும் மஞ்சூரில் இருந்து  அறையட்டி, கொலக்கம்பை, பழனியப்பா எஸ்டேட் செல்லும் சாலையோரங்களின்  இருபுறங்களிலும் ரெட்லீப் மலர்கள் ஏராளமாக பூத்துள்ளது.

கண்களை கவரும்  மெருன் மற்றும் சிவப்பு நிறங்களில் செடிகளின் இலைகளே பூக்களாய்  காட்சியளிக்கின்றன. இதன் இலைகள் ஆரம்பத்தில் பச்சை நிறமாகவும், பின்னர்  பழுப்பு, மஞ்சள் மற்றும் மெருன் நிறங்களாக மாறி இறுதியில் கரும் சிவப்பு  நிறத்தில் காட்சியளிப்பதால் இந்த பூக்களை நிறம் மாறும் பூக்கள் என்றும்  அழைக்கின்றனர்.

 கடந்த சில தினங்களாக மஞ்சூர் பகுதியில்  சுற்றுலா தலங்களாக உள்ள அவலாஞ்சி, கிண்ணக்கொரை, பென்ஸ்டாக் காட்சிமுனை  உள்ளிட்ட பகுதிகளுக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள்  வந்து செல்கின்றனர்.இவ்வாறு வரும் பயணிகள் இந்த ரெட்லீப் மலர்களை கண்டு  பரவசமடைவதுடன் இந்த செடிகளின் அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியடைந்தனர்.

Related Stories: