அம்பை: அம்பை அருகே முறையாக பராமரிக்கப்படாத பிரம்மதேசம் கைலாச நாதர் கோயில் தேர் 40 ஆண்டுகளாக ஓடாத நிலையில் சிதிலமடைந்தும், புதர் மண்டியும் கிடக்கிறது. இதனால் வேதனைபடும் பக்தர்கள், தேரை விரைவில் சீரமைத்து தேரோட்டம் நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் உள்ளனர். அம்பையில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிலான பிரம்மதேசம் கிராமத்தில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த கைலாசநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் சுயம்பு வடிவில் தோன்றிய மூலவர் கைலாசநாதரை பிரம்மாவின் பேரன் ரோமச முனிவர் பூஜை செய்ததால் பிரம்மதேசம் என இக்கிராமத்திற்கு பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் இக்கோயில் தென் தமிழக நவக்கிரக தலங்களில் ஆதி கைலாயங்களில் முதன்மையானதாகவும், தென் மாவட்ட நவக்கிரக ஸ்தலங்களில் சூரியன் ஸ்தலமாகவும், பஞ்ச பீட ஸ்தலங்களில் கூர்ம பீடமாகவும் திகழ்கிறது. மேலும் இத்தலத்தில் சரஸ்வதிக்கும் தனி சன்னதி உள்ளது தனிச்சிறப்பு. இங்கு தாமிரபரணி உத்தரவாகினியாக ஓடுகிறாள். அதாவது தெற்கில் இருந்து வடக்கு நோக்கி ஓடுவது கோயிலை வலம் வந்து வணங்குவது போல் உள்ளது. சித்திரை வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், ஆனி திருமஞ்சனம், நவராத்திரி, திருக்கார்த்திகை, மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், பிரதோச நாட்களில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடு நடக்கிறது.