தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 14 எதிர்கட்சி தலைவர்களுடன் சோனியா ஆலோசனை: இன்று மாலை காணொலி மூலம் நடக்கிறது.!

புதுடெல்லி: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட 14 எதிர்கட்சி தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று மாலை காணெலி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.  கடந்த 10  மாதங்களுக்கு மேலாக டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம், வேளாண் சட்டங்களை  திரும்பப் பெறுதல், 3வது கரோனா அலையைக் கட்டுப்படுத்தும் வகையில் தடுப்பூசி  போடுதை வேகப்படுத்துதல், பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை  செய்வதை கைவிடுதல், நாட்டின் பொருளாதார நிலைமை, அதிகரித்துவரும்  வேலையின்மை, பெகாசஸ் உளவு விவகாரம், வேலையிழந்த மக்களுக்கு நிதியுதவி  வழங்குவது உள்ளிட்ட விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி தலைவர்களின் ஆலோசனை  கூட்டம் இன்று மாலை காணொலி மூலம் நடக்கிறது.

நாடாளுமன்ற மழைக்காலத் தொடரில் எதிர்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டது போல், வரும் காலங்களிலும் ஆளும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. 14 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த ஆலோசனைக் கூட்டம் முடிந்தபின் எதிர்க்கட்சிகள் தலைவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கூட்டாக அறிக்கை வெளியிட உள்ளனர். இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் ஆகியோர் பங்கேற்க உள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கேஜ்ரிவால் ஆகியோர் அழைக்கப்படவில்லை. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 77வது பிறந்தநாளான இன்று எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒரேதளத்தில் ஒன்று கூடுகின்றனர். கொரோனா தொற்று குறையும்பட்சத்தில் விரைவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் சோனியா காந்தியுடன் நேரடியான சந்திப்பில் ஈடுபடவும் வாய்ப்புள்ளது. ஏற்கனவே, நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெற்ற நாட்களில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு சிற்றுண்டி அளி்த்து கடந்த வாரத்தில் ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தத்கது.

Related Stories: