பட்டிவீரன்பட்டி அருகே நெல் வயல்களில் அதிகாரிகள் ஆய்வு-கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை என தகவல்

பட்டிவீரன்பட்டி : தினகரன் செய்தி எதிரொலியாக பட்டிவீரன்பட்டி அருகே நெல்லூர் பகுதியில் விளைந்த நெல் வயல்களை ஆய்வு செய்த அதிகாரிகள், கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.பட்டிவீரன்பட்டி அருகே அய்யம்பாளையத்தில் உளளது மருதாநதி அணை. இந்த அணையின் மூலம் 2,359 ஏக்கர் பழைய பாசன வசதி பெறும் நிலங்களும், 4,151 ஏக்கர் புதிய பாசன வசதி பெறும் நிலங்களையும் சேர்த்து 6,583 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. தற்போது அணையில் 70 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது. மேலும் இந்த அணையிலிருந்து திறந்து விடப்படும் தண்ணீர் மூலமாக தாமரைகுளம், கருங்குளம், ரெங்கசமுத்திரம் போன்ற குளங்கள் பயன்பெற்று வந்தன.

இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக சரியாக மழைப்பொழிவு இல்லாததால் குளங்களுக்கு நீர்வரத்து குறைந்தது. இதனால் வருடத்தில் 1 போக நெல் சாகுபடி மட்டுமே விளைந்து வந்தது. இந்த ஒருபோக நெல் சாகுபடிக்கும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு வந்தது. ஆனால் இந்த ஆண்டு இப்பகுதியில் அதிகளவு பெய்த மழை காரணமாக அய்யன்கோட்டை, புதூர், நெல்லூர், ரெங்கராஜபுரம் காலனி பகுதிகளில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் கடந்த சித்திரை மாதம் நடப்பட்ட கோடைகால 2ம் போக நெல் தற்போது விளைந்து அறுவடைக்கு தயாராக உள்ளது.

வழக்கமாக இப்பகுதியில் விளையும் நெல்லை சித்தரேவில் செயல்பட்டு வந்த அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு அனுப்பி வைப்பர்.

ஆனால் தற்போது இந்த அரசு நேரடி கொள்முதல் நிலையம் மூடப்பட்டுள்ளது. இதனை திறக்க வேண்டும் என கோரி நேற்று தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக திண்டுக்கல் மண்டல மேலாளர் தணிகாசலம், ஆத்தூர் வேளாண்மை உதவி இயக்குனர் உமா, வேளாண்மை அலுவலர் விக்னேஷ்வரன், துணை வேளாண்மை அலுவலர் பெருமாள், உதவி வேளாண்மை அலுவலர் சபரீஸ்வரன் ஆகியோர் நேற்று நெல்லூர் பகுதியில் விளைந்த நெல் வயல்களை ஆய்வு செய்தனர்.

பின்னர் அதிகாரிகள் கூறுகையில், ‘நெல்லூர் பகுதியில் 2ம் போக சாகுபடி நெல் வயல்களை ஆய்வு செய்தோம். இந்த நெல்களை சித்தரேவு அரசு நேரடி கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Related Stories: