எஸ்.பி.வேலுமணியை தொடர்ந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது நடவடிக்கை பாயும்: அமைச்சர் சா.மு.நாசர் பேட்டி

சென்னை: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை தொடர்ந்து, முறைகேடாக பல ஆயிரம் கோடி சேர்த்துள்ள ஜெயக்குமார் மீது நடவடிக்கை பாயும் என்று பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் கூறினார். தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவையின் 2ம் ஆண்டு விழாவை முன்னிட்டு, வளசரவாக்கத்தில் இலவச மருத்துவ முகாம், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், மதுரவாயல் எம்.எல்.ஏ., கணபதி, வேளச்சேரி எம்எல்ஏ ஹசன், தேசிய வர்த்தகர்கள் முன்னேற்ற பேரவையின் தலைவர் ஜோதிகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அமைச்சர் ஆவடி நாசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ‘முன்னாள் அமைச்சர் வேலுமணியை அடுத்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீதும் நடவடிக்கை பாயும். அவர்கள் மீது தவறு இல்லை என்றால் அதை நிரூபித்துவிட்டு வெளியே வரட்டும். அவர்கள், முறைகேடாக பல்லாயிரம் கோடி சேர்ந்து வைத்துள்ளனர். அதனால் தான் அவர்கள் பதறுகின்றனர். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வீட்டுக்கு 1.5 டன் ஸ்வீட் எடுத்து சென்ற விவகாரம் குறித்தும் முறையான விசாரணை நடக்கிறது. அ.தி.மு.க., அரசு கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தை கடனில் தள்ளிவிட்டுள்ளது. இதுவரை 80 ஆயிரம் போலி பால் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: