சங்கரன்கோவில், புளியங்குடியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தீவிரம்

சங்கரன்கோவில் . மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நேற்று சங்கரன்கோவிலில்  பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த வழக்கறிஞர் வீரபுத்திரன் மதுரை உயர்நீதிமன்றத்தில் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் ஆக்கிரமிப்புகள் இருப்பதாகவும், அவற்றை அகற்ற கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். கடந்த மாதம் அந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் ரயில்வே பீடர் சாலை மட்டுமின்றி நகர் முழுவதும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டனர்.

இதைத் தொடர்ந்து நகராட்சி ஆணையர் சாந்தி உத்தரவின் பேரில் நகராட்சி கட்டிட ஆய்வாளர் கஜேந்திரன் மற்றும் தூய்மைப்பணியாளர்கள், போலீசார் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலை, பேருந்து நிலையம், சுவாமி சன்னதி உள்ளிட்ட நகர் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை அகற்றி வருகின்றனர். இதன்தொடர்ச்சியாக நேற்று பேருந்து நிலையத்தில் நகராட்சி இடத்தை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பழக்கடைகள் அகற்றப்பட்டது. பின்னர் பிரதான சாலை, திருவள்ளுவர் சாலை ஆகிய பகுதிகளில் சாலை ஓரங்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. திருவள்ளுவர் சாலையில் காலையில் துவங்கிய ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி மாலை வரை நீடித்தது. இதனிடையே ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருவதை அறிந்த வியாபாரிகள் பலர் தாங்களாகவே தங்கள் கடைகள் முன்பிருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றினர்.

புளியங்குடி:  புளியங்குடி காந்தி பஜாரில் ஏராளமான நகைக்கடைகள், துணிக்கடைகள் உள்ளன. இதில் இருபுறமும் சுமார் 5அடி வரை கடைக்காரகளால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது. மழைநீர் வடிகால் மேல் சிமெண்ட் கற்களால் மூடி, படி அமைத்துள்ளனர். இதனால் வாறுகால் சுத்தம் செய்ய முடியாமல் மழைகாலங்களில் தண்ணீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காந்தி பஜாரில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சிக்கு பொதுமக்கள், சமுக ஆர்வலர்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து நகராட்சி ஆணையாளர் குமார்சிங் தலைமையில், பொறியாளர் சுரேஷ், சுகாதார அலுவலர் முன்னிலையில் காந்தி பஜாரில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதில் சுகாதார ஆய்வாளர்கள் ஈஸ்வரன், வெங்கட்ராமன், நகரமைப்பு ஆய்வாளர் காளீஸ்வரி, வருவாய் ஆய்வாளர் வைரமணி, நகர அளவர் உமர்கபிஸா குர்ஷித், பணி மேற்பார்வையாளர் வினோத், மேஸ்திரி அண்ணாத்துரை, திருமலைவேலு, தூய்மை பணியாளர்கள், களபணியாளர்கள் பங்கேற்றனர், எஸ்ஐ. யோபு சம்பத்ராஜன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Related Stories: