மும்பை: கணவர் ராஜ் குந்த்ரா மீதான ஆபாச பட தயாரிப்பு வழக்கை சட்டப்படி எதிர்கொள்ளப்போவதாக நடிகை ஷில்பா ஷெட்டி அறிவித்துள்ளார். ஆபாச படங்களை தயாரித்து அவற்றை இணையத்தில் வெளியிட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்ததாக ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கடந்த மாதம் 19ம் தேதி கைது செய்யப்பட்டார். ஷில்பா ஷெட்டிக்கும் இதில் தொடர்பு உள்ளதா என மும்பை போலீசார் விசாரித்து வரும் நிலையில் இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த நிலையில் முதல் முறையாக இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஷில்பா ஷெட்டி, கடந்த சில நாட்கள் தனக்கு சவாலானதாக அமைந்துள்ளதாகவும், பல்வேறு தரப்பில் இருந்து கேள்விகள், குற்றச்சாட்டுகள், வதந்திகள் தன்னை நோக்கி பாய்வதாகவும் தெரிவித்துள்ளார்.