ஜோலார்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வு-கல்வி தொலைக்காட்சியை பார்க்க அறிவுறுத்தல்

ஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டையில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியர்கள் நேற்று வீடு வீடாக சென்று புதிய மாணவர்கள் சேர்க்கை மற்றும் பாடப் புத்தகங்களை வழங்கி மாணவர்களை கல்வி தொலைக்காட்சியை பார்க்க பெற்றோர்களுக்கு அறிவுறுத்தினர்.ஜோலார்பேட்டையில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு தமிழ் மற்றும் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. இந்த பள்ளியில் சுமார் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

மேலும் தற்போது இந்த மாதிரி பள்ளியில் எல்கேஜி முதல் 12ம் வகுப்பு வரை 2021- 22ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக மாதிரி பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் தனியார் பள்ளிக்கு இணையாக பள்ளியின் தலைமையாசிரியர் ஐ.ஆஜம்  உள்ளிட்ட பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மூலம் மாணவர்களுக்கு சிறந்த கல்வி முறையும், செய்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தனியார் பள்ளி மாணவர்களும் அரசுப்பள்ளியில் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கல்வி ஆண்டுக்கான புதிதாக மாணவர்கள் சேர்க்கையும், ஏற்கனவே பயிலும் மாணவர்களுக்கு இலவச பாடப் புத்தகங்களை வழங்கியும், பள்ளியின் தலைமையாசிரியர் ஆஜம் மற்றும் ஆசிரியர்கள் நேற்று  ஜோலார்பேட்டை சுற்றுப்பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களில் உள்ள மாணவர்களின் வீட்டிற்கு நேரடியாக சென்று புதிய மாணவர்களுக்கு சேர்க்கையும், இலவச பாடப் புத்தகங்களை வழங்கினர்.பின்னர், மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சியில் பாடங்கள் காணக்கூடிய அட்டவணையையும்  பெற்றோருக்கு வழங்கி பிள்ளைகளை கண்காணிக்க அறிவுறுத்தினர். இதனால் பள்ளியின் ஆசிரியர்களுக்கு பெற்றோர்கள் நல்ல வரவேற்பு அளித்தனர்.

Related Stories: