3 முறை தேசிய விருது வென்ற நடிகை சுரேகா சிக்ரி காலமானார்

மும்பை: பழம்பெரும் பாலிவுட் நடிகை சுரேகா சிக்ரி (75), முதுமை காரணமாக சினிமாவில் இருந்து விலகி, மும்பையிலுள்ள குடும்பத்தினருடன் வசித்து வந்தார். கடந்த சில மாதங்களாக பல்வேறு உடல்நல பிரச்னைகளால் அவதிப்பட்டு வந்த அவருக்கு நேற்று முன்தினம் கடும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி மாரடைப்பால் நேற்று மரணம் அடைந்தார். ஏற்கனவே இந்தி டி.வி தொடர் படப்பிடிப்பில் நடித்தபோது கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டு, மூளை பக்கவாத நோயால் அவர் அவதிப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 1978ல் ‘கிசா குர்சி கா’ படத்தில் அறிமுகமான சுரேகா சிக்ரி, தொடர்ந்து இந்தி மற்றும் மலையாளப் படங்களிலும், டி.வி தொடர்களிலும் நடித்தார். 1988ல் ‘தமஸ்’, 1995ல் ‘மம்மோ’, 2018ல் ‘பதாய் ஹோ’ ஆகிய படங்களுக்காக, 3 முறை சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருது பெற்றார்.

Related Stories: