மும்பை: எல்கார் பரிஷத் வழக்கில் தொடர்புடைய இறந்த சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் சுவாமியின் மருத்துவ அறிக்கை மும்பை உயர்நீதிமன்றத்தில் மகாராஷ்டிரா அரசு தாக்கல் செய்தது. புனேயில் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி நடைபெற்ற மாநாட்டில் சமூக செயற்பாட்டாளர் ஸ்டான் ஸ்வாமி பேசிய பேச்சு காரணமாக கோரேகான் பீமா போர் நினைவிடத்தில் மறுநாள் வன்முறை வெடித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதில் மாவோயிஸ்ட்டுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து எல்கார் பரிஷத் அமைப்புடன் தொடர்புடைய ஸ்டான் சுவாமி தேசிய புலனாய்வு அமைப்பால் கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் கைது செய்யப்பட்டார். நவிமும்பையில் உள்ள தலோஜா சிறையில் விசாரணை கைதியாக அடைக்கப்பட்டிருந்த அவருக்கு பர்கின்சன் நோய் பாதிப்பு இருந்தது. இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்டான் சுவாமி கடந்த 5ம் தேதி சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.