குமரி மாவட்டத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட் வினியோகம் தொடக்கம்

நாகர்கோவில் : சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது திமுக ஆட்சி அமைந்ததும் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி முதல்வராக பொறுப்பேற்றதும், உடனடியாக அதற்கான திட்டத்தில் கையெழுத்திட்டார்.

கடந்த மே மாதம்  (8ம் தேதி) முதல் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். இந்த திட்டம் பெண்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. குமரி மாவட்டத்தில் 288 பஸ்கள் பெண்கள் இலவசமாக  செல்லும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இலவசமாக அனுமதிக்கப்படும் பஸ்களின் முன்புறம் இதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இலவசமாக பயணிக்கும் பெண் பயணிகளை கணக்கீடு செய்யும் வகையில், கட்டணமில்லா டிக்கெட்டை அரசு போக்குவரத்து கழகம் அச்சிட்டுள்ளது. மகளிர் என்பதை குறிக்கும் வகையில் கட்டணத்துக்கு பதில் மகளிர் என தமிழில் அச்சிடப்பட்டு டிக்கெட் வினியோகம் செய்யப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து நேற்று புறப்பட்டு சென்ற பஸ்களில் இந்த டிக்கெட் வினியோகம் செய்யப்பட்டது. இதே போல் மாற்று திறனாளிகள், மாற்று திறனாளிகளுக்கு உதவியாளர், திருநங்கைகள் இலவசமாக பயணிக்கிறார்கள். இதற்கும் கட்டணமில்லா டிக்கெட் வினியோகம் செய்யப்படுகிறது.

Related Stories: